Thursday 21 May, 2009

சாவே! உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ?(44)

சீரிய நெற்றி எங்கே?
சிவந்தநல் இதழ்கள் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
குறுநகை போன தெங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்த நன்நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்ததிங்கே

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரிய விட்டார்
தீய சொல் சொல்லா வாயை
தீயிலே கருகவிட்டார்.

பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான் அழைத்து விட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேய்க் கிளியைக் கலங்கவிட்டு
தாய்க் கிளியைக் கொன்றுவிட்டான்


சாவே! உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ
சஞ்சலமே! நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ
தீயே! உனக்கொரு நாள்
தீ மூட்டிப் பாரோமோ
யாரிடத்துக் போயுரைப்போம்?
யார் மொழியில் அமைதி கொள்வோம்?
யார் துணையில் வாழ்ந்திருப்போம்?
யார் நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம் பறித்த
வேதனை எம்மையும் நீ
ஊரோடு கொண்டு சென்றால்
உயிர்வாதை எமக்கிலையே
நீரோடும் கண்களுக்கு
நிம்மதியை யார் தருவார்
தலைவன் இல்லா நாட்டினை
நினைவில் யார் வைத்திருப்பார்?

ஐயையோ காலமே
ஆண்டவனே எங்கள் துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே

கை கொடுத்த நாயகனை
கைப் புறத்தே மறைத்தாயே
கண் கொடுத்த காவலனைக்
கண் மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா

கனவா கதையா
கற்பனையா அம்மம்மா
தலைவனா மறைந்தார், இல்லை!
நேர்மைக்குச் சாவே இல்லை!
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணமில்லை
இருக்கின்றார் தலைவன்
இங்கே தான்!
இங்கே தான்!

எம்முயிரில் - இரத்தத்தில்
இதயத்தில் நரம்புகளில்
கண்ணில் - செவியில்
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவன்
எமைவிட்டுச் செல்வதில்லை
என்றும் அவர் பெயரை
எம்முடனே வைத்திருப்போம்
அம்மா.... அம்மா.... அம்மா....


நன்றி : விகடன் & கவியரசு கண்ணதாசன்

(சற்றே மாற்றம் செய்யப்பட்டது)

1 comment:

சகாதேவன் said...

நேரு மறைந்தபோது கண்ணதாசன் எழுதிய பாட்டுதானே?
நன்றாக மாற்றம் செய்து எழுதிவிட்டீர்கள்
சகாதேவன்